கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மக்கள் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் இழந்து தவிக்கின்றனர். இதனால் சென்னைக்கு பிழைப்புத் தேடி வந்த பலரும், சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். அவ்வாறு சொந்த ஊர் திரும்புகிறவர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த சேசுபாலன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'கரோனா தொற்று நவம்பர் மாதம் வரை உச்சத்தில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால், உணவு மற்றும் உறைவிடத்திற்கான செலவைச் சமாளிக்க முடியாமல், மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு இ–பாஸ் வழங்கப்படவில்லை.
திருமணம், மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே இ–பாஸ் வழங்கப்படுவதால், சென்னையை விட்டு வெளியேற விரும்பும் மக்களைச் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இ-பாஸ் நடைமுறையைத் தொடர்வதா? வேண்டாமா? என முதலமைச்சர் தலைமையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேவைப்பட்டால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என அனுமதி அளித்து வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் மட்டும் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன - மாநகராட்சி