திருவள்ளூர்: தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளுக்கென அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இயற்கை முறையில் நஞ்சற்ற மிளகாய் சாகுபடி செய்வது ஊக்குவிக்கப்பட்டுவரப்படுகிறது.
அதன்படி, மாநில அரசு விவசாயிகளின் உற்பத்தி, வருமானத்தைப் பெருக்கும்பொருட்டு முதற்கட்டமாக 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தரமான மிளகாய்களை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு உயர் விளைச்சல் பெறவும், விவசாயிகளுக்கு சரியான சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்ற நோக்கத்திலும் தோட்டக்கலைத் துறை, நல்ல சந்தை என்ஜிஓ ஜெகன், ஆச்சி மசாலா நிறுவனத்துடன் இணைந்து சிவப்பு புரட்சியாக 150 ஹெக்டேர் பரப்பளவில் யுஎஸ் 341 மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் நடவுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நட்டு தொடங்கிவைத்தார்.
மிளகாய் ரகம் நாற்றுகள்
இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 500 விவசாயிகள் பயன்பெற உள்ளனர் என்றும், காய்ந்த மிளகாய் சந்தைபடுத்துவதற்கான வாய்ப்புகளும் உருவாக்கி விவசாயிகளுக்குத் தேவையான யுஎஸ் 341 (US 341) மிளகாய் ரக நாற்றுகள் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 30 லட்சம் எண்ணிக்கையில் குழித்தட்டு முறையில் உற்பத்திசெய்யப்படவுள்ளன.
அவை, ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் நாற்றுகள் ரூ.20000 மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
இந்த நிகழ்சியில் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஐ. ஜெபக்குமாரி அனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எபினேசர், தொட்டிகளை ஊராட்சி மன்றத் தலைவர் இ. சீனிவாசன், ஊராட்சி செயலாளர் ரூபாவதி, கொய்யா தோட்ட உழவர் மேலமடை குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: Leopards Spotted At Residential Areas In Coimbatore: நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க மேலும் ஒரு கூண்டு