கடந்த 2019ம் ஆண்டு சேலம் ஐந்து சாலையில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி பார்த்திபன், கமிஷனுக்காக பாலங்கள் கட்டுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்திருந்தார்.
இது முதலமைச்சரின் அலுவல் பணியை குறிப்பிடும் வகையிலும், முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இருப்பதாக கூறி, பார்த்திபனுக்கு எதிராக, சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பார்த்திபன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
பார்த்திபனின் மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார் முன், இந்த அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நிர்மல்குமார், திமுக எம்.பி.யின் பேச்சு, அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் தான் இருப்பதாகவும், முன்னாள் முதலமைச்சரின் அலுவல்ரீதியான பணியை விமர்சிக்கும் வகையில் இல்லை என்றும் கூறி, அவர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: IPL MEGA AUCTION 2022: தவானுக்கு ரூ.8.25 கோடி; ரபாடாவுக்கு ரூ.9.25 கோடி!