சென்னையில் நடைபெற்ற நாதஸ்வரக் கலைஞர் டி.என்.ராஜரத்தினம் கொள்ளுப்பெயரனும்; ஜெயந்தி சரவணன் - சரவணன் மகனுமாகிய கருணாரத்தினம்- காவ்யா ஆகியோரின் திருமணத்தை தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைத்தார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'முதலில் என்னுடைய துணைவியாருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். இரவு 12 மணிக்கே சொல்லிவிட்டேன்.
![மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மு க ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-dmk-stalin-speech-script-photo-7204807_13032022122635_1303f_1647154595_287.jpeg)
இருந்தாலும் எல்லோரும் மேடையில் சொன்னார்களே, நீங்கள் மட்டும் சொல்லவில்லையே என்று வீட்டிற்குச்சென்ற பிறகு கேட்டுவிடக்கூடாது.
பயந்து அல்ல, எல்லோரும் வாழ்த்திய அந்த அடிப்படையில் இன்றைக்கு 63ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் என்னுடைய துணைவியாருக்கு உங்களோடு சேர்ந்து நானும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு குடும்பம்
![மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மு க ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-dmk-stalin-speech-script-photo-7204807_13032022122635_1303f_1647154595_696.jpeg)
நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்களுடைய குடும்பம் மிகப்பெரிய பாரம்பரியம் கொண்டிருக்கும். மிகப்பெரிய வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் ஒரு குடும்பம். ஒரு தமிழ் உணர்வோடு, தமிழ்ப்பற்றோடு இருந்த - இருந்து கொண்டிருக்கின்ற இந்தக் குடும்பத்தில் இந்தத் திருமணம் நடக்கிறது.
எனவே, தமிழ் என்றால் நமக்குத் தானாக ஒரு உத்வேகம் வந்துவிடுகிறது. அது உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி, உக்ரைனில் இருக்கும் தமிழனாக இருந்தாலும் அவர்களையும் காப்பாற்றுகிற இயக்கம் இந்த திமுக இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியும்.
![மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மு க ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-dmk-stalin-speech-script-photo-7204807_13032022122635_1303f_1647154595_28.jpeg)
உக்ரைனில் இருப்பவர்கள் அங்கு அகதிகளாக ஆகிவிடுவார்களோ அல்லது ஆபத்தில் சிக்கிவிடுவார்களோ என்று கருதிக் கொண்டிருந்த நேரத்தில் ஏறக்குறைய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 2000 பேர் அங்கு இருக்கிறார்கள் என்ற செய்தியை நாம் கேள்விப்பட்டவுடன், இந்தியாவில் எந்த மாநிலமும் முன்வராதநிலையில், முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் அவர்கள் அத்தனை பேரையும் இங்கு அழைத்து வருவதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, அவர்கள் அத்தனை பேரையும் பத்திரமாக அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக என்னென்ன முயற்சிகள் எல்லாம் எடுத்து வந்தோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நேற்றோடு அத்தனை பேரும் வந்துசேர்ந்துவிட்டார்கள். கடைசியாக வந்த 9 பேரை வரவேற்பதற்காக நானே விமானநிலையத்திற்குச் சென்று அவர்களை வரவேற்றேன்.
தமிழன் எங்கிருந்தாலும் காப்பாற்றுகிற இயக்கம் திமுக
அதற்காக திருச்சி சிவா தலைமையில் ஒரு குழு அமைத்து, அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.ஆர்.பி.ராஜா, அரசுத் துறையைச் சார்ந்திருக்கும் அலுவலர்களை எல்லாம் குழுவாக அமைத்து, டெல்லியிலேயே பத்து நாள் தங்கி அத்தனை பேரையும் அழைத்து வந்திருக்கின்றனர்.
![மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மு க ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-dmk-stalin-speech-script-photo-7204807_13032022122635_1303f_1647154595_719.jpeg)
எனவே, தமிழன் எங்கிருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுகிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்கு இதை ஒரு எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். எனவே, அப்படிப்பட்ட தமிழ்க் குடும்பத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் உள்ளபடியே நீங்கள் எல்லாம் கலந்து கொண்டு இங்கு மனதார வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள்.
எனவே, தலைமையேற்று நடத்தும் நானும் மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டு, வழக்கமாக நான் திருமண விழாக்களில் எடுத்துச்சொல்வது போல, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும் “வீட்டிற்கு விளக்காக -நாட்டிற்குத் தொண்டர்களாக” மணமக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமைசேர்ப்பவர்களாக வாழுங்கள் வாழுங்கள்” என வாழ்த்தி, தன் உரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்க வேண்டும்: வைகோ