தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன் குமாரின் மகன் வினோத்குமார் திருமணத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அப்போது பேசிய அவர், " அண்மையில் துபாய்க்கு சென்றிருந்த நேரத்தில், ஏதோ பல கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றதாக முன்னாள் முதலமைச்சர் , எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பேசிய செய்திகளையெல்லாம் நாம் பார்த்தோம். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே எனக்கு முன்னால் பேசியவர்களே அதற்குரிய விளக்கத்தைத் தந்திருக்கின்றனர்.
அண்மையில் மூன்று நாட்கள் இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்குப் பயணம் சென்று, நம்முடைய மாநிலத்தின் பிரச்சினைகளை எல்லாம் பிரதமர் இடத்தில் - அதற்குரிய அமைச்சர்களிடத்தில் அந்தக் கோரிக்கைகளை எல்லாம் எடுத்துவைத்து உரிமைக்குக் குரல் கொடுத்து வந்திருக்கிறோம். அதையெல்லாம் மூடி மறைக்க - அதைத் தாங்கிக்கொள்ள முடியாத சிலர் என்ன சொன்னார்கள் என்றால், ஏதோ அச்சத்தின் காரணமாக பயத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிற என்னை அதிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகப் போனேன் என்று சொல்கின்றனர். ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன்.
அங்கு சென்று யாருடைய காலிலும் விழுந்து, இதை எனக்கு செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் நான் போனேனே தவிர, வேறு அல்ல. ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல – பதவியேற்றபோதே நான் சொன்னேன் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்றுதான் சொல்லியிருக்கிறேன். தமிழ்நாட்டுக்காக உழைப்பேன்" என பேசினார்.
இதையும் படிங்க : ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தேர்வு நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை உறுதி