சென்னை: இந்தி சினிமாவின் தேவதாஸ் என்றறியப்பட்ட நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 07) உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'புகழ்பெற்ற இந்தியத் திரைக்கலைஞரும், இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான திலீப் குமார் தனது 98ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.
திரையுலக ஜாம்பவான்
"ட்ராஜெடி கிங்'' என்று அனைவராலும் அறியப்பட்ட திலீப் குமார் இந்தியத் திரையுலகின் ஜாம்பவனாகத் திகழ்ந்தார்.
இவர், திரையுலகினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே மற்றும் இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றவர் என்பதோடு சிறந்த நடிகருக்கான பிலிம் ஃபேர் விருதினை 8 முறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைப்பணியுடன், மாநிலங்களவை உறுப்பினராக இருந்து மக்கள் பணியும் ஆற்றிய அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகத்திற்கும், அவரது அன்பு ரசிகர்களுக்கும் என்னுடைய சார்பாக மட்டுமின்றி தமிழ்நாடு அரசின் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சரை சந்திக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்