சென்னை: தலைமைச்செயலகத்தில் உள்ள பெரிய மரம் ஒன்று, மழையினால் வேரோடு சாய்ந்து விழுந்த விபத்தில் முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் கவிதா உயிரிழந்தார்.
அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தலைமைச் செயலக முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டடத்தின் அருகிலுள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் ஒன்று மழையின் காரணமாக, இன்று காலை சுமார் 9 மணியளவில் வேரோடு சாய்ந்து விழுந்தது.
முதலமைச்சரின் ஆழ்ந்த இரங்கல்
அப்போது , அங்கே காவல் பணியிலிருந்த முத்தியால்பேட்டை போக்குவரத்துக் காவல் நிலைய தலைமைக் காவலர் கவிதா, மரத்தினடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
![காவு வாங்கிய மரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13528511_er.jpg)
இந்த துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த மன வருத்தமடைந்தேன். பணியிலிருக்கும்போது உயிரிழந்த தலைமைக் காவலர் கவிதாவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ரூ.25 லட்சம் நிதி உதவி
மேற்கண்ட சம்பவத்தில் உயிரிழந்த கவிதாவின், குடும்பத்தாருக்கு உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
![உயிரிழந்த காவலர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13528511_jioe.jpg)
முன்னதாக இந்தத் தகவலை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், கவிதாவின் குடும்பத்தாருக்கு நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கவுள்ளதாக கூறிய நிலையில், தற்போது 25 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் உயிரிழப்பு - ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்