இன்று நடைபெற்ற கரோனா தொடர்பான முதலைச்சர் கலந்தாலோசனைக் கூட்டத்திற்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வருமுன் காப்போம் என்பது போல் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைள் எடுத்து வரப்படுகின்றன. இது தொடர்பாகப் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டு, உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு மருத்துவமனை, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுடன் சுகாதாரத் துறை அலுவலர்கள் காணொலி காட்சி மூலம் தொடர்பு, தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்புக் கவசம், உடை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாளொன்றுக்கு 2 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
வாரச் சந்தைகள் வரும் 31ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும். குளிர் சாதன வசதி கொண்ட பெரிய துணிக்கடைகள், பெரிய நகைக் கடைகள், பல்வேறு பொருள்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய கடைகள் போன்றவை நாளை முதல் மூடப்படும். நகைக்கடைகளில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆர்டர் படி பொருள்களைத் தனி வழியில் பெற்றுச் செல்லலாம்.
அதேசமயம் அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கறிக் கடைகள், மருந்தகங்கள், உணவங்கள் ஆகியவை வழக்கம் போல் செயல்படும். மக்கள் அதிகமாகக் கூடும் தமிழ்நாட்டின் முக்கிய திருக்கோயில்களில் வரும் 31ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். அதேபோல், தேவாலயங்கள், மசூதிகளிலும் மக்கள் வருவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களிலிருந்து நோய் பரவாமல் இருக்க போக்குவரத்தை குறைக்க முடிவு எடுக்கப்படுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.