தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட பிரிட்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகக் கடந்த மாதம் 28ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி சென்றார். அவர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செல்லும்போது முதல்வர் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வராகவே சென்றால்தான், தொழில் முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்பதால் யாரிடமும் அப்பொறுப்பை அவர் ஒப்படைக்கவில்லை.
இந்த சுற்றுப்பயணத்தில் பிரிட்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் உள்ள தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய முதலமைச்சர், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். மேலும் அவர் வெளிநாட்டில் உள்ள தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினார்.
பல்வேறு தொழில் நிறுவனங்களில் செயல்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்களைப் பார்வையிட்ட முதலமைச்சர், அந்த தொழில்நுட்பங்களை நம் மாநிலத்தில் செயல்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் 13 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, நாளை அதிகாலை 2.40 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி சென்னை திரும்புகிறார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.