சென்னை: தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே இன்று காலையில் நடந்த வாகன விபத்தில் நெல்லையைச் சேர்ந்த விவசாய கூலிகள் 5 பேர் இறந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருநெல்வேலி மாவட்டம், மணப்படை வீடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாய கூலி வேலைக்காக தனியார் வாகனத்தில் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரத்தில் உள்ள ஓடையில் விழுந்ததில், கலைச்செல்வன் மனைவி பேச்சியம்மாள், சுடலை மகள் செல்வி, கணேசன் மனைவி மலையழகு, மனோகரின் மனைவி பேச்சியம்மாள், வேலுவின் மனைவி கோமதி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்துக்குறித்து அறிந்தவுடன் உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சாலை பாதுகாப்பு மாதத்திலும் விபத்துகள் தொடரும் அவலம்' - ஸ்டாலின் ட்வீட்