தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் சார்பில், தமிழ்நாட்டில் வேலை நாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில், இதற்காகவே வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ (Tamil Nadu Private Job portal, www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையத்தை தொடங்கிவைத்தார்.
இதன்மூலம், இணையவழி நேர்காணல், இணையவழி பணி நியமனம் ஆகிய வசதிகளைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையில் இளைஞர்களை, இணைய வழியாகத் தொடர்புகொண்டு, தனியார் துறை வேலையளிப்போர் பணி வாய்ப்புகளை வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, பள்ளிக் கல்வித் துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நீட்-2020 போட்டித் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பையும் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார். ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம் 412 மையங்களில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன.
கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளித்திடும் வகையில், நீட் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சியினை வழங்க ஆம்பிசாஃப்ட் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இப்பயிற்சியினை பெற இதுவரை 7,420 மாணவர்கள் பதிவுசெய்துள்ளனர்.
இணையதளம் மூலமாக, ஒவ்வொரு நாளும் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு தலா ஒரு மணி நேரம் வீதம், 4 மணி நேர பயிற்சியும், பயிற்சி முடித்தவுடன் அன்றைய நாளே ஒவ்வொரு பாடத்திற்கும் பயிற்சி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.
மேலும், 80 பயிற்சித் தேர்வுகள், 80 வளரி தேர்வுகள், 5 அலகுத் தேர்வுகள், 12 திருப்புதல் தேர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்விரு நிகழ்ச்சிகளிலும், அமைச்சர்கள் செங்கோட்டையன், நிலோபர் கபீல், தலைமைச் செயலர் சண்முகம், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!