சென்னை பெண்மணி
குவைத் நாட்டில் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்த சென்னை அம்பத்தூரை சேர்ந்த பெண்மணி பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த அரசு சாரா நிறுவனம் ஒன்றும் திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளரும் உறுதுணையாக நின்று அந்த பெண்மணியை மீட்டு வந்துள்ளனர்.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (34). இவர் குடும்ப வறுமையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஏஜெண்ட் செந்தமிழ் மூலம் கடந்த ஜீலை மாதம் குவைத் நாட்டுக்கு வேலை பார்க்கச் சென்றுள்ளார். 6 மணிநேர வேலை என்று அழைத்துச் சென்ற கிருஷ்ணவேணியை போதிய உணவு வழங்காமல் 18 மணிநேரம் வேலை வாங்கியுள்ளது அரபிக் குடும்பம் ஒன்று.
ஏஜென்ட் கைவிரிப்பு
அதுமட்டுமின்றி வேலை சரியாக பார்க்கவில்லை என்று அவரை அடிப்பது, அவர்மீது குளிர்ந்த நீரை ஊற்றி குளிர் சாதன் அறையில் நிற்கவைப்பது போன்று சித்தரவதை செய்துள்ளனர். இதனால் அங்கிருந்து நாடு திரும்ப நினைத்த கிருஷ்ணவேணி குவைத் நாட்டின் ஏஜெண்ட்டான இப்ராஹிமிடம் சென்று முறையிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாம்: வாஷிங் மெஷினிலிருந்து 6 அடி சாரைப் பாம்பு மீட்பு!
நாடு திரும்ப வேண்டும் என்றால் இரண்டு லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று இப்ராஹிம் கூறியுள்ளார். மேலும் வேலைக்கு செல்லுமாறு கிருஷ்ணவேணியை இப்ராஹிம் வற்புறுத்தி துன்புறுத்தியும் வந்துள்ளார். தனக்கு உடல்நிலை சரியில்லாததல் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு இப்ராஹிமிடம் கிருஷ்ணவேணி கூறியுள்ளார்.
காவலரிடம் புகார்
ஆனால் இவை எவற்றையும் கண்டுகொள்ளாத இப்ராஹிம் கிருஷ்ணவேணியை வேலைக்கு அனுப்புவதிலேயே குறியாக இருந்துள்ளார். இந்த கொடூரங்களை தொலைபேசி மூலம் தன் கணவருக்கு கிருஷ்ணவேணி தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து சென்னையில் இயங்கும் அரசு சாரா நிறுவனமான ஏய்ம்ஸ் (All India Movement for Service) நிறுவனத்தை கிருஷ்ணவேணியின் கணவர் அணுகியுள்ளார்.
இதையும் படிக்கலாம்: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: குலு மணாலியிலிருந்து சொந்த மாநிலத்திற்கே அழைத்து வரப்பட்ட பெண்!
அந்நிறுவனத்தின் இணை நிறுவனரான கன்யாதேவி அம்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய முற்பட்டுள்ளார். இது வெளிநாடு சமபந்தப்பட்ட வழக்கு என்பதால் காவல் துறையினர் வெளியுறவுத் துறையை அணுகுமாறு கூறியுள்ளனர். கிருஷ்ணவேணியை குவைத் அனுப்பி வைத்த ஏஜெண்ட் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால் அம்மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியிடம் கன்யாதேவி புகார் தெரிவித்துள்ளார்.
போலி கடவுச்சீட்டு
இதுகுறித்து சிபி சக்கரவர்த்தி உடனடியாக விசாரணை நடத்தியதில் ஏஜெண்ட் செந்தமிழ் கிருஷ்ணவேணியை போலி கடவுச்சீட்டு மூலம் குவைத்துக்கு அனுப்பி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதேபோன்று பல நபர்களை செந்தமிழ் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதும் அம்பலமாகி உள்ளது. பின்னர் அவன் மூலமாகவே கிருஷ்ணவேணியை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்: உல்லாச விடுதியான அழகு நிலையம்... 4 சிறுமிகள் மீட்பு!
இதுகுறித்து சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கன்யாதேவி, “ கிருஷ்ணவேணி அவரோடு பணிபுரிந்த அவரைப்போலவே கொத்தடிமையாக இருந்துள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணியின் தொலைப்பேசியில் தனக்கு தொடர்பு கொண்டு பேசினார்.
தற்கொலை முடிவு
நான் மீட்கப்படவில்லை என்றால் என்னை இவர்கள் கொன்றுவிடுவார்கள் அல்லது நானே தற்கொலை செய்து கொள்வதாக அவர் கதறினார். இதுகுறித்து எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனிடம் மனு அளித்தோம். அவர் டெல்லியில் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி வந்தார். அரசு நடவடிக்கைக்கு சிறிது காலம் எடுக்கும் என்பதால் பின்னர் திருவண்ணாமலை எஸ்.பி சிபி சக்கவர்த்தியிடம் புகார் அளித்து அவர் உதவி மூலம் கிருஷ்ணவேணியை 17 நாள்களில் மீட்டு வந்தோம்.
இதையும் படிக்கலாம்: காந்தி ஜெயந்தி விழாவில் மது போதையில் இருந்த ஆசிரியர் சடலமாக மீட்பு !
கிருஷ்ணவேணியை முதலில் பெங்களூரு பிறகு டெல்லி அதற்கு பின்னர் துபாய் அங்கிருந்து குவைத் என்று அழைத்துச் சென்றுள்ளனர். டெல்லியில் அவரிடம் இரண்டு கடவுச்சீட்டுகளை கொடுத்து அதில் ஒன்றை நாப்கினில் மறைத்து வைத்து துபாய் அழைத்துச்சென்று பின்னர் நாப்கினில் மறைத்து வைத்த கடவுச்சீட்டு மூலம் குவைத் அழைத்துச் சென்றுள்ளனர்.
கோரிக்கை
ஏஜெண்ட் செந்தமிழ், இப்ராஹிம் ஆகிய இருவருமே அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் இல்லை. எனவே அரசாங்கம் இது போன்ற முறையற்ற ஏஜெண்டுகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களிடம் சிக்கியுள்ள நிறைய தமிழ் பெண்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம்: காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா