பல்லவ அரசின் சிற்பக்கலைக்கு சாட்சியாக விளங்கும் மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்கக்கோரி நவம்பர் 1ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி கிருபாகரன் கடிதம் எழுதியிருந்தார்.
அதில், கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு மற்றும் வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவற்றில் ’லைட்டிங் ஷோ’ விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், புராதான சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டடங்கள் கட்ட அனுமதிக்கக்கூடாது, குப்பைப் போடுவதை குற்றமாக்கி ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும், சீன அதிபர் வருகையின் போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியிருந்தார்.
இதையடுத்து, தாமாக முன் வந்து இதனை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு, நீதிபதி கிருபாகரன் அளித்த பரிந்துரைகள் தொடர்பான நடவடிக்கைகள், ஒதுக்கப்பட உள்ள நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
![சென்னை உயர்நீதிமன்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5348537_highcourt.jpg)
இந்நிலையில் இன்று, இவ்வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
அதனை ஏற்று வழக்கை ஜனவரி 2 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய நாள் மாமல்லபுரம் தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரைச் சந்திக்க விவசாயிகள் சென்னை பயணம்