சென்னை: தமிழ்நாட்டில் யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரி கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், திருச்சியைச் சேர்ந்த நித்திய சவுமியா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாட்டில் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அமர்வில் இன்று (ஜனவரி 12) மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ரயிலில் யானைகள் அடிபட்டு இறப்பதைத் தடுப்பது தொடர்பாக ரயில்வே அலுவலர்கள் இந்த வாரம் ஆலோசனை நடத்த இருப்பதால், இது சம்பந்தமாக அடுத்த விசாரணையின்போது அறிக்கைத் தாக்கல்செய்யப்படும் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், "யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்படி கடந்த ஆண்டு உத்தரவிட்டும், விசாரணையில் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை. விசாரணையில் உள்ள தாமதம் குறித்து காணொலி காட்சி விசாரணையில் ஆஜராகி சிபிஐ எஸ்பி விளக்கமளிக்க வேண்டும்.
யானைகளை வேட்டையாடி திருடப்பட்ட ஒரு தந்தத்தைக்கூட பறிமுதல்செய்ய முடியவில்லை. இப்படியே சென்றால் நீதிமன்றமே சிறப்புப் புலன் விசாரணைக் குழுவை நியமித்து, யானைகள் வேட்டை தொடர்பான வழக்குகளின் விசாரணையை மாற்ற வேண்டி வரும்” எனத் தெரிவித்தனர்.
சிபிஐ தரப்பில் ஆஜரான மதுரைக் கிளை உதவி சொலிசிட்டர் ஜெனரல், இதுவரை எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கைத் தாக்கல் செய்யும்படி சிபிஐ அலுவலர்களை அறிவுறுத்துவதாகத் தெரிவித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 21ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.