சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி இன்று (டிசம்பர் 22) எழும்பூர் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 3300 சதுரடி பரப்பளவுள்ள மனை - வணிக கட்டடம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து திருக்கோயில் வசம் பெறப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சீராய்வு கூட்டங்களின் அறிவுறுத்தலின்படி துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான 3300 சதுரடி பரப்பளவுள்ள மனை - கட்டடம் பாலகிருஷ்ணன் என்பவரிடம் 33 ஆண்டுகளாக வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
இக்கட்டடத்திற்கு நிர்ணயம்செய்யப்பட்ட நியாய வாடகை, நிலுவைத் தொகையினை கட்டத் தவறியதால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, தீர்ப்பின் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றி திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.
சுவாதீனம் எடுக்கப்பட்ட சொத்தின் மதிப்பு ஆறு கோடி ரூபாய் ஆகும்.
இந்நிகழ்வின்போது திருக்கோயில் செயல் அலுவலர் அ. ரமணி, திருக்கோயில் அலுவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:'நூறு வருஷம் வாழணுமா? இந்த ஏழு போதும்!'