தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம், வேதாரண்யத்தில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
2003 முதல் 2008 வரை பணியாற்றியுள்ளதாகவும், 24 மாதங்களில் 480 நாட்கள் பணியாற்றியுள்ளதால், தங்களுக்கு பணிநிரந்தரம் வழங்கும்படி தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த தமிழ்நாடு குடிநீர் விநியோகம், வடிகால் வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி, ஒப்பந்த பணியாளர்கள் தமிழ்வேந்தன் உள்பட 33 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், குடிநீர் மற்றும் வடிகால் வாரிய சட்டத்தில் தனி பணி விதிகள் கூறியுள்ள நிலையில், தமிழ்நாடு தொழில் அமைப்புகள் பணிநிரந்தரம் குறித்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒப்பந்தப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய உத்தரவிட முடியாது எனவும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் பணிநிரந்தரம் கோர முடியாது எனவும் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு 480 நாட்கள் பணியாற்றியுள்ளார்கள் என்பதற்காக மட்டும், ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் வழங்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்குவது என்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனக் கூறியுள்ளார்.
அரசு அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் பணிகளுக்காக தினக் கூலி அடிப்படையில், தங்களுக்கு விருப்பப்பட்டவர்களை, தேர்வு விதிகள், இட ஒதுக்கீட்டு நடைமுறைகள் பின்பற்றாமல் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கி, பின்வாசல் நியமனங்கள் மேற்கொள்வது, தகுதியான விண்ணப்பதாரர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் எனத் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்தின்படி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பை உறுதி செய்வதற்காக, ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கி, பின்வாசல் நியமனங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.