தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்பது குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை தமிழ்நாடு அரசு நியமித்தது.
அதற்கான அரசாணை ஜூன் 10ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதில், நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், அதற்கான மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த அரசாணைக்கு தடை விதித்து, ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு பாஜக பொது செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம் நாடு முழுவதும் பொதுவானதாகும். மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அந்த சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனை குழுமம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி மருத்துவ கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்பது விதி, ஆனால் அதை மீறும் வகையில் தற்போது தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது.
ஏற்கனவே ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பை படிக்க ஏதுவாக அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாணைக்கு தடைவிதித்து ரத்து செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிவசங்கர் பாபாவுக்கு 3 நாள் போலீஸ் காவல்