சென்னை: பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிகளுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோயில் பணிகளுக்குப் பயன்படுத்தாமல் தனிப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக பாஜக ஆதரவாளரும், யூ-ட்யூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த மே 29ஆம் தேதி கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத், சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரிய கார்த்திக் கோபிநாத் மனுவையும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய காவல்துறையின் மனுவையும் தள்ளுபடி செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காவல் துறையும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பூந்தமல்லி நீதிமன்றம் ஏற்கெனவே கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழக்கை முடித்து வைத்த நீதிபதி, வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு மீது விசாரணை நடத்தினார்.
அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோகுல், கார்த்திக் கோபிநாத் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கின் மூலம் கோயில் திருப்பணி என்ற பெயரில் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக சுட்டிக்காட்டினார். மிலாப் கணக்கு மூலமே வசூலித்தது தவறு என்றும்; போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
கார்த்திக் கோபிநாத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகவாச்சாரி, போலீசார் கடந்த முறை ரூ.28 லட்சம் என்று தெரிவித்துவிட்டு, தற்போது ரூ.3 லட்சம் எனக் குறிப்பிடுவதாகத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வங்கிக் கணக்கு விவரங்களை விரிவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: பூந்தமல்லியில் மாணவர்களை வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்