சென்னை நுங்கம்பாக்கம் புது தெருவைச் சேர்ந்தவர் நூர் முகமது. இவர் தி. நகர் சத்யா பஜாரில் செல்ஃபோன் கடை நடத்திவருகிறார். இவரது மகன் சையது முகமது அல்பவாஸ் (23). இவர் கஞ்சா, மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மண்ணடியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த தனது இருசக்கர வாகனத்தில் சையது முகமது சென்றார். மது அருந்திவிட்டு போதையிலிருந்த சையது வேறு நபரின் வாகனத்தை மாற்றி எடுத்துச் சென்றுள்ளார்.
அதன்பிறகு வெளியே நிற்கவைத்திருந்த இருசக்கர வாகனத்தைக் காணவில்லை என அதன் உரிமையாளர் யாசிம் நசீம் (23) அக்கம்பக்கத்தில் தேடினார். அப்போது பாரிமுனை சிக்னல் அருகே சையது முகமது திருடிய பைக்கை பெட்ரோல் இல்லாமல் தள்ளிச் சென்றபோது யாசிம் நசீம் பிடித்துள்ளார்.
பின்னர் இருசக்கர வாகனத்தைத் திருடிய சையது முகமதுவை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைதுசெய்தனர்.