கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த ஒசபுரத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரப்பா. அவரது மனைவி பாக்கியலட்சுமி. ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த பாக்கியலட்சுமிக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டதால், ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் முறையாகச் சிகிச்சையளிக்கத் தவறியதால், கருவிலேயே சிசு உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக சிசு உயிரிழந்ததாகக் குற்றஞ்சாட்டி உறவினர்கள் ஒசூர் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.
![Baby dead while delivery, HRC notice issued](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-hrcsuomotu-script-7204624_05012021202714_0501f_1609858634_870.jpeg)
இது குறித்து நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் துரை. ஜெயச்சந்திரன், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கைத் தாக்கல்செய்யும்படி, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை இயக்குநர் ஆகியோருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரவில் மெழுகுவர்த்தியுடன் போராட்டம்!