திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 522 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம், தினமும் 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தாமலே, அரசியல் செல்வாக்கின் காரணமாக, கூட்டுறவுச் சங்க விதிகளை மீறி முன்னாள் அமைச்சர் கிருஷ்ணமூர்த்திக்கு திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்ந்தெடுத்ததை ரத்து செய்யக் கோரி அதிமுகவைச் சேர்ந்த மணி, சுதாகர் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு தொடர்பாக ஆவின் இயக்குநர், திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவுச் சங்க துணைப்பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.