சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சொந்தமாக ஐந்து மருந்தகங்கள் உள்ளன. இதன் மேற்பார்வையாளராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது கண்காணிப்பின் கீழ், எழும்பூர் சாலையிலுள்ள மருந்தகத்தை வேலூரைச் சேர்ந்த முகமது இஷாக் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கவனித்து வந்தார்.
இந்நிலையில், மருந்தகத்தில் பொறுப்பாளராக இஷாக் பணியாற்றிய 2018ஆம் ஆண்டு செப்டம்பர், டிசம்பர் மாதங்களில், ரசீது ஏதும் போடாமல் வாடிக்கையாளர்களுக்கு மருந்து பொருட்களை விற்று, நான்கு லட்சத்து 26 ஆயிரத்து 500 ரூபாய் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், மருந்துகளை வேப்பேரி, புரசைவாக்கம் பகுதிகளிலுள்ள மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்காமல், அவற்றை டெலிவரி செய்தது போன்று கணினியில் போலி கணக்கு காட்டி, அவற்றை வெளியே விற்றதோடு, வசூல் பணத்திலும் முறைகேடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
அதன்பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் வேலைக்கு வருவதை இஷாக் நிறுத்திவிட்டு தலைமறைவாகவும் இருந்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணன், எழும்பூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் செய்திருந்த நிலையில், தலைமறைவாக இருந்த இஷாக்கை காவல் துறையினர் கைது செய்தனர்.