சென்னை: தமிழ்நாட்டில் பி.ஆர்க் படிப்புக்கு நாட்டோ (NATO) அல்லது ஜெ.இ.இ. (JEE) நுழைவுத்தேர்வில் தகுதிப் பெற்ற மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த நடைமுறை கடந்தாண்டு வரை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், வரும் 2021-22ஆம் கல்வியாண்டில் பி.ஆர்க் படிப்புக்கான கொள்கை விளக்க குறிப்பில் நாட்டோ நுழைவுத்தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
இதனை எதிர்த்து அகடமிக் சொசைட்டி ஆப் ஆர்க்கிடெக்ட் என்ற அமைப்பும், மெய்யம்மை என்ற மாணவியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அதில், பிற மாநிலங்களில் ஜெ.இ.இ. தேர்வு எழுதியவர்களும் பி.ஆர்க் விண்ணப்பிக்க தகுதிப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாட்டோ தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கூற முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை ஒத்திவைப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த மனுவுக்கு விரிவாக விளக்கமளிக்கும்படி ஒன்றிய, மாநில அரசுகளுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் உத்தரவிட்டார்.
அதேசமயம், பி.ஆர்க் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கவுள்ளதால் நாட்டோ, ஜெ.இ.இ. தேர்வில் தகுதிப் பெற்றவர்களை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் தேர்வு என்பது இந்த வழக்கின் இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் உத்தரவிட்டார்.

ஜெ.இ.இ. தேர்வில் தகுதிப் பெற்றவர்களால் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இயலாததால், ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்க அனுமதித்து, கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வில் ஓ.எம்.ஆர் ஷீட்டில் மோசடி - மாணவி புகார்