சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் இன்று (பிப். 16) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனைவிட, 3,354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்கள் மற்றும் சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகள் கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி முடிவடைந்தது.
இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (பிப். 16) காலை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தீர்ப்பளிக்கின்றார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.