வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஐந்தாம் தேதி நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை நடந்த வாக்குப்பதிவு தினத்தன்று, காஷ்மீருக்கான சிறப்புத் தகுதிச் சட்டம் 370 நீக்கப்படுவதாக, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதனால் நாடெங்கும் பதற்றம் நிலவியது. பாஜக அரசின், இந்த அறிவிப்பை அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றன.
ஆனால் நாடெங்கிலும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள், இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின. காஷ்மீர் சிறப்புச் சட்ட நீக்கம், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான, வேலூர் தொகுதியிலும் எதிரொலித்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மதியம் வரை மந்தநிலை நீடித்தது. பிற்பகலில் வேகமெடுத்து ஒட்டுமொத்தமாக 72 விழுக்காடு வாக்குப் பதிவானது.
![admk loss story in vellore lok sabha election அதிமுக தோல்விக்கு காஷ்மீர் விவகாரம் காரணமா அலசும் சிறுதொகுப்பு காஷ்மீர் விவகாரம் திமுகவினரின் வெற்றிக் கொண்டாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4091159_kashmir.jpg)
ஏற்கனவே முத்தலாக் தடைச் சட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றியதால் பாஜக மீது இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர தெரிவித்தன. தற்போது காஷ்மீர் விவகாரமும் தொற்றிக்கொள்ளவே அதிமுக வேட்பாளர் ஏ. சி. சண்முகம் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். இதில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பெற்ற, நான்கு லட்சத்து 85 ஆயிரத்து 340 வாக்குகளை விட, எட்டாயிரத்து 141 வாக்குகள் குறைவாக (நான்கு லட்சத்து 77 ஆயிரத்து 199) பெற்று தோல்வியைத் தழுவினார்.
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பார்க்கும்போது வாணியம்பாடியில், 92 ஆயிரத்து 599 வாக்குகள் திமுகவுக்கும், 70 ஆயிரத்து 248 வாக்குகள் அதிமுகவுக்கும் விழுந்துள்ளன. இதில் திமுகவை விட 22 ஆயிரத்து 351 வாக்குகள் குறைவாக அதிமுக பெற்றுள்ளது. இதேபோல் ஆம்பூரில் 70 ஆயிரத்து 768 வாக்குகள் அதிமுகவும், 79 ஆயிரத்து 371 வாக்குகள் திமுகவும் பெற்றுள்ளன.
முன்னதாக, ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் தேர்தலில் திமுக 96 ஆயிரத்து 455 வாக்குகளும், அதிமுக 58 ஆயிரத்து 688 வாக்குகளும் பெற்றன. அப்போது, 37 ஆயிரத்து 767 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திமுக, தற்போது எட்டாயிரத்து 603 வாக்குகளே அதிகம் பெற்றுள்ளது. வேலூரில் 78 ஆயிரத்து 901 திமுகவும், அதிமுக 72 ஆயிரத்து 626 வாக்குகள் பெற்றுள்ளன.
முத்தலாக் விவகாரத்தில், மக்களவையில் அதிமுக ஆதரவு அளித்தாலும், மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும், வேலூர் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அதிமுக கணித்தது. அதனால்தான் பரப்புரைகளுக்கு பாஜகவைத் தவிர்த்து, மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்தது.
![admk loss story in vellore lok sabha election அதிமுக தோல்விக்கு காஷ்மீர் விவகாரம் காரணமா அலசும் சிறுதொகுப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4091159_election.jpg)
பெரும்பான்மையான இஸ்லாமியர்களின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, பரப்புரையில் பாஜகவை களமிறக்காமல் அதிமுக தவிர்த்தாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
காஷ்மீர் சிறப்புச் சட்டம் ரத்து, முத்தலாக் விவகாரங்களால் பாஜக அரசின் மீது இஸ்லாமியர்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்ததாலே வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவியதாகக் கூறப்படுகிறது.