சென்னை: ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதற்கு நடிகர் நாசர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமுதாய முன்னேற்றத்திற்கு திரைப்படங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன. இருக்கின்றன என்பதை வரலாற்று ஏடுகள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன.
இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டத்தின்போது அக்கால திரைப்படங்கள் அவ்வுணர்வை மக்களிடையே பரவ செய்ததற்கான சாட்சிகள் கறுப்பு, வெள்ளை படங்களாக இன்றும் காண கிடைக்கின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டில் சமுதாய சீர்திருத்தம் கொண்டுவந்ததில் திரைப்படங்கள் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன.
இன்றைய சூழலில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பி இருக்கிறது.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தணிக்கை முறையே போதுமானதாக இருந்தும், இப்புதிய சட்டம் படைப்பாளிகளின் கருத்துக்களை முடக்கும் வண்ணமாய் இருக்கிறது.
அரசுகள் மக்களின் பிரதிநிதி மக்கள் உணர்வுகளை என்றும் அவர்கள் செவி சாய்க்க வேண்டும், கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியாய் இருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்விஷயம் குறித்து துறை சார்ந்தவர்களின் கவலையை ஆழமாக கேட்டறிந்து அதற்கான முன்னெடுப்பும் எடுத்திருக்கிறார் என்பது எங்களை நிம்மதி அடைய செய்வதாக இருக்கிறது.
அவருக்கு நடிகர் சமூகத்தின் சார்பாக நன்றி சொல்வது நம் கடமை. முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021: 'படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது- உதயநிதி