திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை அருகே கெட்டனமல்லியில் வடுவம்மாள் (80) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் வேணு நாயக்கர் உயிரிழந்த நிலையில் திருமணமாகாத தன்னுடைய இளைய மகள் செல்லம்மாள் மற்றும் கணவரை இழந்த மூத்த மகள் சாந்தியுடன் வசித்து வருகிறார்.
நேற்று இரவு உறங்கிக் கொண்டிருக்கும் போது நள்ளிரவில் வீடு புகுந்த மூன்று மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கிவிட்டு வீட்டின் உள் தாழ்பாளை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
நினைவு திரும்பிய மூதாட்டி வீட்டின் வெளியே வந்து கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் விரைந்து அம்மூன்று வட மாநிலத்தவரையும் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது வீட்டின் அருகாமையில் உள்ள பள்ளத்தில் விழுந்த வட மாநிலத்தைச் சார்ந்தவர் ஒருவர் மட்டும் சிக்கிய நிலையில் இரண்டு பேர் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அடைந்த கிராம மக்கள் சிக்கிய நபரை அடித்து உதைத்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவல் அறிந்த கவரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கவரப்பேட்டை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விழுப்புரம் அருகே தீ விபத்து - 8 வீடுகள் சேதம்