சென்னை: சென்னை அம்மா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சென்னை மாநகராட்சி சார்பாக இது வரை 1.05 கோடி இலவச உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த மக்களுக்கு பொருளாதர உதவி கிடைக்கிறது. இதற்காக 300 இடங்களில் உணவு சமைக்கப்பட்டு சுடாக உணவு பரிமாறப்படுகிறது.
நிவர், புரெவி புயல் மழை காரணமாக தேங்கிய தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. நகரில் தொடர்ந்து தண்ணீர் தேங்கும் 23 இடங்களில், வரும்காலத்தில் நீர் தேங்காத வகையில் வடிகால்கள் அமைக்கப்படும்.
சென்னையின் அதிகமான இடங்கள், கடல் மட்டத்துக்கும் கீழ் உள்ளதால் நீர் வடிவதில்லை; இது பொறியாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. செம்மஞ்சேரி, வேளச்சேரி, பெருங்குடி ஆகிய பகுதிகள் நகரின் தாழ்வான பகுதிகளாக இருப்பதால், 1.50 டி.எம்.சி. தண்ணீர் இந்த பகுதிகளில் தேங்குகிறது. இது மாநகராட்சியின் ஒரு மாதத்துக்கு தேவையான தண்ணீராகும். இதனைச் சமாளிக்க பள்ளிக்கரணை, பெரும்பக்கம், செம்மஞ்சேரி, நாவலூர், தாளம்பூர் ஆகிய பகுதிகளில், 5 மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதனால் தென் சென்னை பகுதியில் நீர் தேங்கும் பிரச்னை இருக்காது.
இதற்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்படும். பணிகள் மார்ச் மாதத்துக்குள் தொடங்கும். இந்த திட்டத்திற்கு 300-400 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர நகரின் பிற பகுதிகளிலும் மழைநீர் வடிகால் கால்வாய்கள் கட்டப்படும். இதற்கு ஐஐடி போட்டியாளர்களின் கருத்து, ஆலோசனை கேட்கப்படும்" என்றார்
தொடர்ந்து, கரோனா தொற்று விகிதம் 2-3 சதவிகித அளவில் உள்ளது. சோதனைகளை அதிகரித்ததன் மூலம் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் 25 லட்சம் சோதனைகளை கடக்க உள்ளோம். நாள் ஒன்றுக்கு 10,000 சோதனைகள் செய்யப்படுகிறது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மருத்துவர்களுக்கு, மருத்துவ பணியாளர்களுக்கு முதற்கட்டமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும்.
இதன்படி 50-60 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். அதற்கு அதடுத்தபடியாக மாநகராட்சி முன்கள பணியாளர்கள், கடைநிலை காவலர்களுக்கு வழங்கப்படும். பின்னர் பிற நோய் தொற்று பாதிப்பு உள்ள முதியவர்கள், வயதானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றார்.
மேலும், 225 ஏக்கர் பரப்பளவு கொண்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், 100 ஏக்கர் மட்டும் குப்பைகள் மறுசுழற்சி பணிகளுக்காக ஒதுக்கிவிட்டு, 125 ஏக்கர் நிலம், சதுப்பு நிலமாக மீண்டும் திரும்ப தரப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வருமான வரி வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரத்தை விடுவித்த நீதிமன்றம்!