டெல்லி: இந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள், கடந்த மே 26ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, சமூக வலைதளங்கள், புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அலுவலர்களை நியமிக்க வேண்டும். சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தைப் பகிர்தல் வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. இதற்கு பெரும்பாலான சமூக வலைதள நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இருப்பினும், பிரபல நிறுவனமான ட்விட்டர் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் அலுவலர்களை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியுள்ளது. இதை ஏற்க ட்விட்டர் நிறுவனம் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ட்விட்டர் நிறுவனம், "இந்தியாவில் முக்கியமான பொது வலைதளமாக ட்விட்டர் இருந்து வருகிறது. புதிய விதிமுறைகளுக்கு இணங்க அனைத்துவிதமான இறுதிக்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதுகுறித்து இந்திய அரசிடம் முறையாகப் பகிரப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக இந்திய அரசுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தது.