அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் மக்களின் வாழ்க்கை முறையில் அன்றாடம் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. இதனால் செயல்களாக இருந்த அனைத்தும் தற்போது செல்போன் செயலிகளுக்குள் அடக்கப்பட்டுவருகின்றன. முதலில் பேருந்தை பயன்படுத்தியவர்கள் தற்போது செயலிகள் மூலம் கார்களை புக் செய்து சட்டென்று பறந்துவிடுகின்றனர். அதுபோல் வீட்டில் உணவு செய்யாவிட்டாலும் கவலை இல்லை, காரணம் அவர்களுக்கு கைகொடுக்க பல ஆன்லைன் உணவு விற்பனை செயலிகள்.
மக்களின் இந்த சோம்பேறித் தனத்தை சரியாக பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களும் தங்களது பாக்கெட்டுகளை நிரப்பி வருகின்றனர். அதற்காக நாம் இந்நிறுவனங்களை தவறாக சித்திரித்துவிட முடியாது தினந்தோறும் மக்கள் இவர்களை நாடிச்செல்ல ஒரே காரணம், அவர்கள் அளித்து வரும் சலுகைகளே என்று கூறலாம்.
அந்த வகையில், சமீப காலமாக மக்களிடம் உபெர் ஈட்ஸ் என்ற உணவு விற்பனை செயலி பிரபலமடைந்து வருகிறது. 'உபெர் ஈட்ஸ்' ஆட்கள் மூலம் உணவுப் பொருட்களை சேர்த்துவரும் நிலையில் தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான முயற்சியில் இந்த நிறுவனம் களமிறங்கியுள்ளது.
அதன்படி, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஆளில்லா விமானங்கள் மூலமாக உணவு சேவை அளிக்க அந்நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் அந்நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டியாகோ பல்கலைக்கழகம், மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் ஆகியவற்றோடு இணைந்து இதற்கான சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
இந்தக் குட்டி விமானங்கள் உணவகங்களில் இருந்து குறிப்பிட்ட இடத்திற்கு சரியான நேரத்தில் வந்து உணவுகளை சேர்த்துவிடும். பின் அங்கிருந்து டெலிவரி செய்யும் அந்நிறுவனத்தை சேர்ந்த நபர்கள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப்படும். மேலும் இந்த சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பாக பல்வேறு உணவகங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் உபெர் ஈட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.