கோவை மாவட்டம் தடாகம் சாலை திருவள்ளுவர் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (25) என்பவர் கீரணத்தம் பகுதியில் உள்ள ஐ.டி கம்பெனிக்கு வாடகை கார் ஓட்டி வருகிறார். இவர் கடந்த ஒரு மாத காலமாக அவர் தந்தையிடம் புல்லட் பைக் வாங்கித் தருமாறு கேட்டுக்கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 4) இரவு சுமார் 9:30 மணியளவில் மதுபோதையில் வீட்டிற்குச் சென்ற அவர், பைக் கேட்டு தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு அவரது தந்தை, சிறிது காலம் பொறுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வசந்தகுமார், பெற்றோரையும், தம்பியையும் வீட்டில் இருந்து வெளியேறும்படியும், தனிமையில் இருக்க விரும்புவதாகவும் சத்தம் போட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் அருகில் இருக்கும் உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து வந்து அவர்கள் பார்க்கையில், வசந்தகுமார் அவரது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தடாகம் காவல் துறையினர், வசந்தகுமார் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.