தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவிவருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட உள்ளது. போடியைச் சேர்ந்த 53 வயது பெண், ஓடைப்பட்டியைச் சேர்ந்த 70 வயது முதியவர், ஆண்டிபட்டியைச் சேர்ந்த 52 வயது பெண், கம்பத்தைச் சேர்ந்த 72, 60 மற்றும் 56 வயது முதியவர்கள் என 6 பேர் இதுவரை உயிரிழந்த நிலையில், இன்று இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா லட்சுமிபுரம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணிற்கு கடந்த ஜூன் 26ஆம் தேதி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாள்களாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தேனி மாவட்டத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.