கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் பேரூராட்சி 6ஆம் வார்டுக்கு உள்பட்ட தேரிவிளை கிராமத்தில் கடந்த சில நாள்களாக பேரூராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கூறியும் பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் அவ்வழியாக வந்த பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை வண்டியை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா வந்து பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்கினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தென்தாமரைகுளம் எஸ்ஐ ராஜசேகர், செயல் அலுவலர் சசிகலா, அதிமுக பேரூர் செயலாளர் தாமரை தினேஷ், முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன் பன்னீர்செல்வி மற்றும் அதிமுக நிர்வாகி டாக்டர் சுந்தர்சிங் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக தண்ணீர் விட நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆராய்ச்சிப் படிப்புக்காக கேம்பிரிட்ஜ் செல்லும் முதல் படுக இன மாணவி!