திருவாரூர் மாவட்டம் நெடுஞ்சேரி அருகே உள்ள நாராயணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (40). இவருடைய மனைவி அருள்செல்விக்கும் (34) அதே பகுதியைச் சேர்ந்த பாபு (கொத்தனார்) என்பவருக்கும் சென்ற இரண்டு வருடங்களுக்கும் மேலாக திருமணத்திற்கு மீறிய உறவு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் பாபு, அருள்செல்வி அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இதை பாபு தனது செல்போனில் படம் எடுத்து வைத்துக்கொண்டு அருள்செல்வி கணவர் மோகன்ராஜிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இல்லையென்றால் முகநூலில் காணொலியை பதிவேற்றம் செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மோகன்ராஜ் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் பாபு, மோகன்ராஜின் மனைவி அருள்செல்வி ஆகியோரை கைதுசெய்ய வலியுறுத்தி குடவாசல் காவல் துறையிடம் உறவினர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் 15 நாள்களுக்கு மேலாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் காவல் துறையை கண்டித்து நடுவச்சேரி நாராயணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடவாசல் காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு சென்றனர்.
இதனால் கும்பகோணம் திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.