தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையிலிருந்து தருமபுரி மாவட்டம், சோலை கொட்டாய் என்னும் அவர்களது சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், தருமபுரி சுகாதாரத்துறை அலுவலர்கள் சென்னையிலிருந்து வந்தவர்களை சோதனை செய்தனர். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 62 வயதான முதியவர், 8 வயது சிறுமிக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 62 வயதான முதியவர் சென்னையில் மளிகைக் கடை நடத்தி வந்துள்ளார் என்றும், கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக குடும்பத்துடன் ஊர் திரும்பியதும் தெரிய வந்தது.
வைரஸ் பாதித்த இருவரும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில், கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் தேர்வுத்துறை இயக்குநரகத்தில் பணியாற்றும் உயர்அலுவலர் ஒருவர் சொந்த ஊரான தருமபுரிக்கு வந்துள்ளார். அவருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்துள்ளனர். வைரஸ் தொற்று சோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
அலுவலர் தங்கியிருந்த வீட்டுக்கு அருகே சுகாதாரத்துறை பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.