உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட பரவலை அடையும் நிலையில் அதன் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை இன்று (ஜூன் 25) ஒரே நாளில் 30 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 431ஆக உயர்ந்துள்ளது. இதில், 224 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 233 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் தற்போது வரை கரோனா தொற்று காரணமாக 4 பேர் உயிரிழந்தனர்.
தளர்வளிக்கப்பட்ட பின்னர், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நபர்களால் கரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகரித்து வருவதாக சுகாதார வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸால் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 70 ஆயிரத்து 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 39 ஆயிரத்து 999 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போது வரை 911 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கரோனா தொற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.