தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழர் விடுதலைக் களம் கட்சியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் சாமி தலைமை தாங்கினார்.
அப்போது, கேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டும் கேரள அரசைக் கண்டித்தும், தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் வனத்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவசாயி அணைக்கரை முத்து வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரியும் முழக்கம் எழுப்பினர்.
இதனிடையே ஆதி திராவிட பிரிவில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், பள்ளர் உள்ளிட்ட 7 பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் எனவும்; தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளரை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், காவல் துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.