தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டமான விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் தங்கள் பொதுஅறிவை வளர்த்துக்கொள்வதற்கு அடிகோலுகிறது. ஆனால், குத்தாலம் வட்டாரம் கோமல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களில் ஒருவருக்குக்கூட இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை.
இதனால், இப்பள்ளியில் படித்து தற்போது பல்வேறு கல்லூரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவர்கள், ஊரடங்கு காரணமாக கல்லூரிகளில் வகுப்புகள், பயிற்சிகள், தேர்வுகள் அனைத்தும் இணைய வழியில் நடத்தப்படுவதால், மடிக்கணினி இல்லாமல் அவதியடைந்துவருகின்றனர்.
எனவே, தங்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துவந்தனர். இதனிடையே, இப்பள்ளியில் இந்தாண்டு 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பைக் காரணம் காட்டி மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்தகவலை அறிந்த 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் இன்று பள்ளி வளாகத்தில் கூடி, தங்களுக்கும் மடிக்கணினியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர்.