தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த தர்மன், தேவப்பிரியா என்ற தம்பதிகளுக்கு இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. தர்மன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தேவப்பிரியாவின் தாயார் வீட்டிற்கு தனது குடும்பத்தினரோடு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது, அவர் ஓசூர் நோக்கி சென்றபோது, பல்சர் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், தேவப்பிரியாவின் கழுத்தில் இருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால், நிலைதடுமாறிய இருவரும் வாகனத்தில் இருந்து கீழே வீழ்ந்தனர். பின்னர், தேவப்பிரியாவின் நான்கு பவுன் தங்கச் சங்கிலியை அவர்கள் பறித்துச் சென்றதில், அவரது முகம், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, அவ்வழியாக சென்ற நபர்கள், இவர்களை உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது தேவப்பிரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தேவப்பரியா அணிந்திருந்த நகை, கவரிங் நகை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இருசக்கர வாகனத்தில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.