விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேசிகாபுரம் பகுதியில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தங்கவேல் என்பவர் கொலைசெய்யப்பட்டார்.
இந்தக் கொலையில் தொடர்புடைய முதுகுடி பகுதியைச் சேர்ந்த புதிய தமிழக கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ராஜலிங்கம் என்பவரை கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கொலைசெய்தனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி அக்கட்சியின் தொண்டர்கள் ராஜபாளையம் திருநெல்வேலி செல்லும் சாலையில் மறியல் போராட்டம் செய்தனர். இந்த நிலையில் கொலையாளிகள் சென்னை நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.
இதைத் தொடர்ந்து ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் குற்றவாளிகளான முனியராஜ் (38), பாலமுருகன் (36), பாலசுப்பிரமணியம் (34) ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் நீதிபதி வெற்றிமணி முன்பு முன்னிலைப்படுத்தினார்.
விசாரணைக்காக காவல் துறையினர் ஏழு நாள் அனுமதி கேட்டனர். ஆனால் மூன்று நாள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
இதையடுத்து அவர்களை மதுரைக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.