ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள சிப்காட் தொழிற்பேட்டை 2,500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டுவருகிறது. இந்தத் தொழிற்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன.
தொழிற்பேட்டையைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில், தொழிற்பேட்டையில் செயல்பட்டுவரும் வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய டயர்களை எரிக்கும் தொழிற்சாலையிலிருந்து மாலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை மட்டும் நாள்தோறும் கரும்புகையினை வெளியிட்டுவருகிறது.
இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சுத்திணறல், வாந்தி, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இதுதொடர்பாக, தொழிற்சாலை நிர்வாகத்தினரிடமும், தொழிற்பேட்டை நிர்வாகத்திடமும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவந்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்கள் புகார்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதததைக் கண்டித்தும், இரவு நேரங்களில் கரும்புகை வெளியேற்றுவதைக் குறைக்காமல் அதிகப்படுத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டயர் எரிக்கும் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, சென்னிமலை காவல் துறையினர், தொழிற்சாலை நிர்வாகத்தினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் கரும்புகையைக் கட்டுப்படுத்திடவும், இரவு நேரத்தில் ஒட்டுமொத்தமாக புகையை வெளியேற்றப்படுவதை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த போராட்டம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு அரசு மத்திய அரசின் ஏவல் ஆளாக செயல்படுகிறது'- கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு!