சென்னை, காந்தி பீட்டர்ஸ் காலனியில் உள்ள 342 குடியிருப்பில் அரசு அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியிருப்பை இடித்து விட்டு வணிக வளாகம் கட்டுவதற்காக அங்கு குடியிருப்போரை, குடியிருக்க தகுதியில்லாத லாயிட்ஸ் காலனி குடியிருப்புக்கு மாற்ற கட்டாயப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர், அந்த காலனியில் தங்கியிருப்போரை காலி செய்ய மிரட்டுவதோடு, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பையும் துண்டித்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக பீட்டர்ஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் முத்துச்செல்வன் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை.ஜெயச்சந்திரன், தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையின் முதன்மை செயலாளர், வீட்டு வசதித்துறையின் நிர்வாக இயக்குநர் ஆகியோர் இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.