திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் யாஸ்மின் பேகம். இவரது கணவர் அபுதாகிர். திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை சாலை பகுதியில் ஆட்டிறைச்சி கடை நடத்தி வரும் யாஸ்மின் பேகம் அவரது கணவர், மாமனார், மாமியார், குழந்தைகளுடன் தாலுகா காவல் நிலையத்திற்கு புகார் மனு அளிக்க வந்தார்.
அம்மனுவில், ”திண்டுக்கல் அருகே உள்ள அடியனூத்து ஊராட்சிக்குட்பட்ட ராஜலட்சுமி நகரைச் சேர்ந்த பிரேம் நசீர் என்பவரிடம் 2018ஆம் ஆண்டு தனது கணவர் 5 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார். அதற்கு மாதந்தோறும் ரூபாய் 15 ஆயிரம் வட்டி பணம் மாதம் செலுத்தி வந்தோம்.
இதனிடையே கரோனா தொற்றினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக வட்டி பணம் செலுத்த முடியவில்லை. இதை பயன்படுத்தி கடன் வாங்க அடமானம் வைத்த 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை எழுதித்தரும்படி கேட்கிறார். மேலும் இந்த ஆறு மாதங்களுக்கு கட்டாத வட்டிக்கும் சேர்த்து வட்டி கட்டும்படி வற்புறுத்துகிறார்.
அது மட்டுமல்லாமல் பிரேம் நசீர் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வரன் எங்களிடம் உடனடியாக வீட்டை எழுதி கொடுங்கள் இல்லையென்றால் உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். ஏற்கனவே இதேபோல் மிரட்டும்போது நாங்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தோம். மீண்டும் தற்போது மிரட்டுவதால் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.