உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிக பாதிப்பைக் கொண்டிருக்கும் சிவப்பு குறியீட்டு பகுதியான சென்னையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.
பிற மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்தாலும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா பரவல் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக டிஜிபி அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என பலரும் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் இன்று (ஜூலை 3) ஒரே நாளில் 2,027க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வரும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அமலாக்க அலுவலர்கள் ஆறு பேர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் 19 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் நேற்று முன்தினம் (ஜூலை 1) அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானதை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 62 ஆயிரத்து 592 நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும், 961 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதில் 38 ஆயிரத்து 948 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த பரவலை தடுக்க சென்னை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் இணைந்து முகக் கவசம் வழங்குவது, கபசுரக் குடிநீர் வழங்குவது, சென்னையில் உள்ள 200 வார்டுகளில் அனைத்து வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்துவது என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.