நாடு முழுவதும் கரோனா தொற்று அதி தீவிரம் அடைந்துவருகிறது. அதே நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல தளர்வுகளை மத்திய அரசு படிப்படியாக அறிவித்துவருகிறது.
இதன்தொடர்ச்சியாக, கரோனா ஊரடங்கு தளர்வையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்றுமுதல் பொதுநல வழக்குகள், ஆள்கொணர்வு வழக்குகளை விசாரிக்கும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேரடியாக வழக்கு விசாரணையை மேற்கொள்கிறது.
அதேபோன்று பிற வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிபதிகள் வழக்கம்போல காணொலி வாயிலாக வழக்குகளை விசாரிக்கின்றனர் . உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து, வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.