தென்காசியைச் சேர்ந்த ஜமுனாபாய் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் அருள்குமார் மீன் விற்பனை தொழில் செய்து வந்தார். கடந்த மே 21ஆம் தேதி இரவு தாமதமாக வீட்டிற்கு வந்தவர், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர்களை காவல் துறையினர் அழைத்துச் சென்றதாக கூறினார்.
மறுநாள் காலை இருசக்கர வாகனத்தை வாங்கி வருவதற்காக பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக நான் காவல் நிலையம் சென்றபோது, அரை நிர்வாண கோலத்தில் கணவர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். காவல் துறையினர் தாக்கியதில் அவருக்கு காயங்கள் இருந்தன. அவரை வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், மன உளைச்சலில் காணப்பட்டார். இந்நிலையில், 23ஆம் தேதி சுடுகாட்டுப் பகுதியில் எனது கணவர் விஷம் அருந்தினார்.
பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார். கண்மூடித்தனமாக காவல் துறையினர் தாக்கியதன் காரணமாக எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அதை மறைத்து மதுபோதையில் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, எனது கணவரின் இறப்பு குறித்து மறுவிசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல் துறையினர் தாக்கியதன் காரணமாக தற்கொலை செய்து கொண்ட கணவரின் இறப்பு குறித்து மறுவிசாரணை நடத்தக் கோரிய வழக்கை ஆலங்குளம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.