கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் சூழ்நிலையில், தற்போது தான் மீண்டும் தொழில்களைத் தொடங்கியுள்ளதாகவும், இன்னும் சரிவர தொழில்துறை இயங்காத நிலையில் தற்போது மின் கட்டணம் செலுத்தக் கூறுவதை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி கோவையைச் சேர்ந்த 19 சிறு, குறு தொழில் துறை (கோசியா) அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய கோசியா அமைப்பின் தலைவர் ஜேம்ஸ், “கடந்த 6ஆம் தேதி மின் துறை அமைச்சரை சந்தித்து அருகாமையில் உள்ள மாநிலங்கள் எல்லாம் மின் கட்டணத்திற்கு சலுகைகள் அளித்துள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளபட்டது. இதேபோல் அமைச்சர் வேலுமணியிடமும் கோரிக்கை வைத்தோம். ஆனால், மின்சார வாரியம் கூடிய விரைவில் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இது சிறு, குறு தொழில் துறையினருக்கு மிகவும் வேதனை அளிக்கும் விதமாக உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மின்கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.