வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தேனி மாவட்டத்திற்கு இ-பாஸ் அனுமதியோடு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் 161 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டு, 115 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் சிகிச்சையில் இருக்கும் நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தேனியிலுள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றில் பணிபுரிந்துவந்த தொழிலாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவராவார்.
கடந்த சில நாள்களாக காய்ச்சலின் தீவிரம் அதிகரித்துக் காணப்பட்டதால், தாமாகவே முன்வந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டுள்ளார். அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதனிடையே அவர் பணிபுரிந்துவந்த உணவகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து, மூடப்பட்டுள்ளது.