உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் பாதிப்பு, சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஊரடங்கு என்பதால் கடந்த அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சென்னையில் கஞ்சா போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருள்களின் புழக்கம் அதிகமாகியுள்ளது. இதனால், இன்னொரு பக்கம் சட்ட ஒழுங்கும் பாதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த 3 இளைஞர்கள், தங்களது நண்பனையே கொலைவெறியோடு தாக்கியுள்ளதாக அறிய முடிகிறது.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்( 28). இவர் நேற்று தனது நண்பர்களுடன் கஞ்சா அடித்துவிட்டு, பின்னர் கஞ்சா பொட்டலம் வாங்குவதற்காக தனது 3 நண்பர்களுடன் கண்ணகி நகர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அப்போது கண்ணகி நகரில் உள்ள எழில் நகர் பகுதியில் கஞ்சா வாங்கி திரும்பியபோது, அவர்களுக்குள் அதனை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென்று 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷை, தலை மற்றும் கை பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த சதீஷை அருகிலிருந்த நபர்கள் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கண்ணகி நகர் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருகின்றனர்.