கரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, முகக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்க போக்குவரத்து காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி முதல் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை பிடித்து வழக்குப்பதிவு செய்து 500 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். தற்போதுவரை முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது 42 ஆயிரத்து 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 2 கோடியே 10 லட்சத்து 43 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் தகுந்த இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உத்தரவும் போடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் உத்தரவிட்டிருந்தனர்.
அதனையும் மீறி இரு சக்கர வாகனங்களில் 2 பேர் செல்கிறார்கள். இதனால் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்க தொடங்கியுள்ளனர்.
கடந்த மூன்று நாள்களாக போக்குவரத்து காவல் துறையினர் இதனை செயல்படுத்திவருகின்றனர். தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் ஒருவருக்கு மேல் இருசக்கர வாகனங்களில் சென்றதாக இதுவரை 1,160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடமிருந்து 9 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளதாகவும் போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.